தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - விசாரணைக்கு உத்தரவு
சென்னை: நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தங்களது கடற்படைக்கு இதில் தொடர்பில்லை என்று இலங்கை துணைத் தூதரகம் மறுத்துள்ளது.
நவம்பர் 7ம் தேதி கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு மீனவர் காயமடைந்தார். இலங்கை கடற்படைதான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்வளத்துறை இணை இயக்குநர் தில்லை கோவிந்தன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ விவரம், ஏற்பட்ட பாதிப்பு, துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணங்கள், சம்பவம் நடந்தபோது தமிழக படகுகள் இந்திய எல்லைக்குள் இருந்தனவா, இதைத் தடுக்க என்ன வழிகள் என்பது குறித்து இந்த விசாரணை அதிகாரி விசாரித்து அரசுக்கு அறிக்கை கொடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரன்யம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என்றும், 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை மீன்வளத்துறை செயலாளரிடம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மறுப்பு
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் இலங்கை கடற்படைக்கு எந்தத் தொடர்பும் இல்லை என இலங்கை துணைத் தூதரகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 26ம் தேதி ஏற்பட்ட இந்திய - இலங்கை கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை இலங்கை அரசு உறுதியுடன் கடைப்பிடித்து வருகிது. இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது.
நவம்பர் 7ம் தேதி சம்பவத்தில் கடற்படைக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அன்றைய தினம் காங்கேசன்துறையை விட்டு கடற்படை படகுகளோ, கப்பல்களோ எங்கும் செல்லவில்லை.
அன்றைய தினத்தில் கோடியக்கரை - காங்கேசன்துரை மார்க்கத்தில் எந்தத் துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை.
இந்த சம்பவம் விடுதலைப் புலிகளின் கைவரிசையாகத்தான் இருக்கும். இந்திய, இலங்கை நல்லுறவைக் கெடுக்க விடுதலைப் புலிகள்தான் இவ்வாறு செய்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.