ஓகனேக்கல் திட்டம்: டெண்டர் கோரப்பட்டு விட்டது - கருணாநிதி
ஓகனேக்கல்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி, டெண்டரும் கோரப்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நாளை சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், உறுப்பினர்களுக்கு அறிவுரை என்ற முறையில் வழக்கம் போல கடமை உணர்வோடு, கண்ணியத்தைக் காப்பாற்றுகின்ற வகையிலும், ஜனநாயக நெறி தவறாமலும் சட்டமன்ற நடவடிக்கைளில் ஈடுபட வேண்டும் என உறுப்பினர்களுக்கு கூறப்பட்டது என்றார்.
ஓகனேக்கல் திட்டத்திற்கு கடனுதவி வழங்கப் போகும் ஜப்பான் நிறுவனத்துடன் பேசி அத்திட்டத்தைத் தடுப்போம் என கர்நாடக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு, ஜப்பான் நிறுவனத்துடன் கடனுதவி தொடர்பாக பேசி, ஒப்புக் கொண்டு, கையெழுத்தாகி, பணிகள் தொடங்குவதற்கான டெண்டரும் கோரப்பட்டு விட்டது என்றார் கருணாநிதி.