நிலவை நெருங்கியது சந்திராயன்-200 கி.மீ தொலைவில் சுற்றுகிறது
பெங்களூர்: இந்தியாவின் சந்திராயன்-1 விண்கலம், நிலவை வேகமாக நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவுக்கும், சந்திராயனுக்கும் இடையிலான தொலைவு 200 கிலோமீட்டராக குறைக்கப்பட்டது.
முற்றிலும் இந்தியாவின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது ஆளற்ற நிலவு விண்கலமான சந்திராயன்-1 நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சந்திராயன்-1 நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. அப்போது நிலவுக்கும், சந்திராயனுக்கும் இடையிலான தொலைவு 504 கிலோமீட்டராக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இது மேலும் குறைக்கப்பட்டு 200 கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. இதுதொடர்பான பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின், டெலிமெட்ரி மற்றும் கமாண்ட் கட்டமைப்பின் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர்.
இரவு 8.03 மணிக்கு தொடங்கிய இந்தப் பணி 57 விநாடிகள் நீடித்தது. விண்கலத்தில் உள்ள 440 நியூட்டன் திரவ என்ஜினை இயக்கி சந்திராயனுக்கும், நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைக்கப்பட்டது.
வரும் நாட்களில் சந்திராயனின் தொலைவு மேலும் குறைக்கப்படும். நவம்பர் 15ம் தேதி வாக்கில் அது 100 கிலோமீட்டர் தொலைவுக்கு குறைக்கப்படும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள மூன் இம்பாக்ட் பிராப் நிலவின் தரைப் பகுதியில் இறங்கும். பின்னர் சந்திராயனில் இடம் பெற்றுள்ள மற்ற 10 அறிவியல் சாதனங்களும் தங்களது பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துளளது.
அக்டோபர் 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து சந்திராயன் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.