உத்தப்புரம் செல்ல தடையில்லை-டிஐஜி
மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல தடை ஏதுமில்லை என டிஐஜி ராஜேந்திரன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரை மாவட்டம், இ.கோட்டைப்பட்டி, உத்தப்புரம், எழுமலை ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளின் நலன் கருதி சமாதானக் குழு அமைக்கப்படும்.
இந்த குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரி, காவல்துறை அதிகாரிகள், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.
இந்த குழு அங்கு ஆய்வு செய்து அமைதி ஏற்படுத்த முயற்சி செய்வார்கள்.
பிரச்சனைக்குரிய பகுதிகளான இ.கோட்டைப்பட்டி, உத்தப்புரம், எழுமலை ஆகிய ஊர்களில் நடைபெற்ற சம்பவங்களில் போலீசார் இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் 1200 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு கைது நடவடிக்கைகள் தொடர வாய்ப்பில்லை.
அமைதிக்குழு பரிந்துரையின் பேரில் வழக்குகள் குறித்த கருத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.