திருமாவை கைது செய்ய கோரும் இளங்கோவன்
தூத்துக்குடி: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் அமைச்சர் இளங்கோவன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அமெரிக்க பொருளாதார விழ்ச்சி இந்திய வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இதற்கு மத்திய அரசின் சிறப்பான நடவடிக்கைகள் தான் காரணம்.
விடுதலை புலிகள் இயக்கம் உலக பயங்கரவாத இயக்கம் என 33 உலக நாடுகள் அறிவித்துள்ளன. விடுதலைபுலிகள் தமிழர்களுக்காக போராடுபவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிரபாகரன் யாழ்பணத்தில் வசித்து வந்த 10 ஆயிரம் முஸ்லிம்களை துரத்தியடித்தார். பல இலங்கை தமிழ் தலைவர்களை கொலை செய்துள்ளார். சென்னையிலும் சில கொலைகளையும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் கொன்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரஸ் மீட்டில் அது குறித்து மிக அலட்சியமாக பதில் அளித்தார்.
பிரபாகரனை இலங்கை அரசு பிடித்து இந்திய அரசிடம் ஓப்படைக்க வேண்டும். காரணம் அவர் கொலை குற்றவாளி.
புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் தேச துரோகிகள். திருமாவளவனை முதலில் கைது செய்ய வேண்டும். புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
தேசபக்தி இல்லாதவர்கள்தான் புலிகளுக்கு ஆதரவாக பேசுகின்றனர். பிரபாகரன் படத்தை வைத்து இருப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உண்மையை சொன்னால் பல தலைகள் உருளும்
இதற்கிடையே, இன்று தென்காசியில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற ராஜீவ் காந்தி படுகொலை வெறி சம்பவத்தில் பிரபாகரன் முதல் குற்றவாளியாவார். இச்சம்பவத்திற்கு பிறகு பிரபாகரனோ, விடுதலை புலிகளோ தங்களுக்கும், ராஜீவ் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளனரா... கூறவில்லை.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இலங்கை அரசு பிரபாகரனை கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். விடுதலை புலிகள் விஷயத்தில் ஜெயலலிதாவின் கருத்தும், காங்கிரஸ் கருத்தும் ஒன்றுதான்.
யாழ்பாணத்தில் வாழும் தமிழ் பேசும் மூஸ்லிம்களை விடுதலை புலிகள் கொலை செய்கிறார்கள். தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஆதரிக்க முடியாது. இவைகளால் எத்தனை உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளன.
இலங்கையில் அல்லல்படும் தமிழர்களுக்கு இந்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் நிதி வழங்கியுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் முதல் தர குடிமக்கள்.
தமிழகத்தில் நடந்த பல சம்பவங்களில் விடுதலை புலிகளுக்கு தொடர்பு உள்ளது.
தமிழ்நாட்டில் மின்வெட்டு காரணமாக 3 ஷிப்டாக செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் ஒரு ஷிப்டு கூட இயங்கமுடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி விரைவில் வருவதற்கு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதனை இப்போது தெளிவ படுத்த முடியாது. போர்களத்தில்தான் போரின் சூழ்ச்சிமுறை தெரியும். மேலிடம் முடிவு எடுக்கும் வரை தமிழகத்தில் கூட்டணி தொடரும்.
மத்திய அமைச்சர் ராஜா மீதான ஊழல் குற்றச்சாட்டு விஷயத்தில் நான் கவனம் செலுத்த வில்லை. அதேசமயம் அது புதிய விசயமும் இல்லை. உண்மையை சொன்னால் பல தலைகள் உருளும்.
தமிழகத்தில் 10 ஜவுளி தொழில் நுட்ப பூங்கா அமைய உள்ளது.
காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லாமல் இல்லை. ஒரு ஊருக்கு இரு தலைவர்கள் பரவாயில்லை.மாநில தலைமைக்கு இரு தலைவர்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.