ஜெ.வுக்கு பாதுகாப்பே இல்லை: செங்கோட்டையன் பாய்ச்சல்
ஈரோடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும் கூட ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு அருகே உள்ள பவானியில் அ.தி.மு.க. சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும்,முன்னாள் அமைச்சரும்மான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் தலைவிரித்து ஆடிய தீவிரவாதத்தை கடந்த 1991 ம் ஆண்டு முதல் 1996 ம் ஆண்டு வரை கட்டுப்படுத்தியவர் ஜெயலலிதா.
இந்தியாவில் உள்ள பீகார், பஞ்சாப், கர்நாடகா, ஒரிசா, உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய நேரத்தில் கூட தமிழ்நாடு அமைதி பூங்காவாக காட்சியளிக்க காரணம் ஜெயலலிதா தான். இதை உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு முழு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
அவருக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டியில் வாழும் மக்களுக்கு கூட தெரியும்.
ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வில்லை.
இதற்கு அவர்கள் பதில் செல்லியே ஆக வேண்டும் என்ற காலம் வரும் என்றார் அவர்.