தமிழ் திரையுலகுக்கு போட்டியாக சிங்கள நடிகர்கள் போராட்டம்
இலங்கை இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரி தமிழத் திரையுலகம் சார்பில் முதலில் இயக்குநர்கள் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் நடிகர் - நடிகைகள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து டிவி நடிகர்- நடிகைகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. திரைப்படத் தொழிலாளர்கள் சார்பிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் இதற்குப் போட்டியாக சிங்கள நடிகர் - நடிகைகள் நாளை கொழும்பு நகரில் உள்ள சுதந்திர தின சதுக்கத்தில் போட்டி போராட்டம் நடத்தவுள்ளனர்.
இந்த போராட்டத்தின்போது அதிர்ஷ்ட பூஜை நடத்தப் போவதாக போராட்ட அமைப்பாளரும், நடிகரும், அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகர்களில் ஒருவருமான ரவீந்திர ரன்டனியா தெரிவித்துள்ளார்.
ஓகனேக்கல் பிரச்சினையின்போது சென்னையில் நடிகர் - நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, பெங்களூரில் அதே நாளில், கன்னட நடிகர் - நடிகைகள் போட்டி உண்ணாவிரதம் நடத்தினர். தற்போது அதே பாணியில், சிங்கள நடிகர் - நடிகைகள் போட்டி போராட்டம் நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.