மாலேகன் குண்டுவெடிப்பு: கான்பூரில் மடாதிபதி கைது
கான்பூர்: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக உ.பி. மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தயானந்த பாண்டே என்கிற மடாதிபதியை மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து உ.பி. மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரிஜ்லால் கூறுகையில், தயானந்த பாண்டே என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் உ.பி. மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். ஜம்முவில் மடம் நடத்தி வருகிறார்.
கைது செய்யப்பட்ட தயானந்த பாண்டே கான்பூரிலிருந்து லக்னோ கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
பாண்டேவுடன் தொடர்பில்லை - பஜ்ரங் தளம்
ஆனால் பாண்டேவுக்கு, பஜ்ரங் தளம் அமைப்புடன் எந்த விதமான தொடர்பும் இல்லை என அந்த அமைப்பின் தேசிய
ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சர்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கைது செய்யப்பட்டவர் யார் என்றே தெரியவில்லை. அவர் பஜ்ரங் தளம் அமைப்பில் உறுப்பினராகவும் இல்லை என்றார் அவர்.