சட்டசபையில் அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
சென்னை: சட்டசபையில், ஜெயலலிதா குறித்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் இறங்கினர். இதையடுத்து அவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் இன்று பேசினார்.
அப்போது, சட்டக் கல்லூரி வன்முறைக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார் கூறுகிறார்.
தர்மபுரியில் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிருடன் அதிமுகவினரால் கொளுத்தப்பட்டபோது, அதற்குப் பொறுப்பேற்று அவரது தலைவி பதவி விலகினாரா என்று கேட்டார்.
இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து துரைமுருகனை நோக்கி கோஷமிட்டனர். அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கோரினர். மேலும், சபாநாயகர் இருக்கையை நோக்கியும் அவர்கள் விரைந்தனர். திமுக அரசை சாடியும் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவினரை அவர்களது இருக்கைகளுக்குப் போகுமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் பலமுறை கேட்டுக் கொண்டும், அவையின் மையப் பகுதியில் நின்றபடி அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டபடி இருந்தனர். இதையடுத்து அவர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே நுழைந்து அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றினர்.
அதிமுகவினர் வெளியேற்றப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
முன்னதாக விவாதத்தில் கலந்து கொண்டு ஜெயக்குமார் பேசுகையில், போலீஸாரின் கண் முன்பாக இந்த சம்பவம் நடந்துள்து. ஆனால் போலீஸார் வன்முறையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.
காவல்துறை முதல்வர் பொறுப்பில் உள்ளது. எனவே அவர் இந்த சம்பவத்திற்குத் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
வன்முறை நடந்து கொண்டிருந்தபோது கல்லூரிக்கு வெளியே அமைதியாக நின்று கொண்டிருந்த அனைத்துப் போலீஸார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது. பசும்பொன் கிராமத்தில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கார் தாக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் தினகரன் அலுவலகத்தின் மதுரை கிளையில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.