சென்னையில் அரசு பஸ் எரிப்பு- தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி மோதலைத் தொடர்ந்து இன்று காலை சென்னை வியாசர்பாடியில் ஒரு அரசுப் பேருந்தை மர்மக் கும்பல் தீவைத்து எரித்தது. சட்டக் கல்லூரி விவகாரம் ஜாதிக் கலவரமாக மாறி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில், தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை சட்டக் கல்லூரியில் நேற்று இரு பிரிவு மாணவர்களிடையே பெரும் கலவரம் வெடித்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை வியாசர்பாடியில் அரசுப் பேருந்தை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி தீவைத்து எரித்தது.
திருவொற்றியூரிலிருந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து ஒன்று பொன்னேரி புறப்பட்டது. வியாசர்பாடியில் பேருந்து வ்நதபோது 10 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்தது.
பின்னர் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகளை அந்தக் கும்பல் கல் வீசித் தாக்கி உடைத்தது. அனைவரையும் வெளியே வருமாறும் அது உத்தரவிட்டது. யார், என்ன என்று கண்டக்டர் கேட்டபோது, அதைப் பொருட்படுத்தாத அக்கும்பல் திடீரென கையில் வைத்திருந்த பத்து லிட்டர் பெட்ரோலை பஸ்சுக்குள் ஊற்றி தீவைத்து விட்டது.
இதையடுத்து பஸ்சுக்குள் இருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
கும்பலின் தாக்குதலில் பஸ் கொளுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் வருவதற்குள் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது.
தமிழகம் முழுவதும் உஷார் நிலை
இதற்கிடையே, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் ஜாதி் கலவரமாக வெடித்து விடாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிற அரசுக் கல்லூரிகளிலும் பெருமளவில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பதட்டமான, சர்ச்சைக்குரிய பகுதிகளிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications