பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா-அத்வானி
ஹைதராபாத்: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் பாஜகவின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அத்வானி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஐதராபாத்தில் மட்டும் 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதனால் மக்கள்கடும் பீதியில் உறைந்துள்ளனர்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ்கட்சி தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று கூறியது, ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்துவிட்டது.
வரும் தேர்தலில் பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும். இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில்தான் உத்தரகாண்ட், சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் அமைக்கப்பட்டது. எனவே எங்களை ஆட்சியில் அமர்த்தினால் 100 நாட்களில் தெலுங்கானா உருவாகும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. காய்கறியோ தங்கத்திற்கு இணையான அளவுக்கு உயர்ந்து வருகிறது என்றார் அத்வானி.