பொருளாதார நெருக்கடியால் எங்களுக்குப் பாதிப்பில்லை: எச்.சி.எல். துணைத் தலைவர்
எச்.சி.எல். நிறுவனம் சார்பில் இந்திய சூழ்நிலைக்கேற்ற புதிய வகை லேப்டாப்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. லேப்டாப் சீரிஸ் 39 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை லேப்டாப்கள், நேற்று பெங்களூரில் தொடங்கி வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ் பால், எங்களது பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை எந்த வகையிலும் குறையவில்லை. இருப்பினும் கூட நாங்கள் கவனத்துடனேயே இருந்து வருகிறோம்.
அரசுத் துறை, தொழில்துறை, நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பிலும் வழக்கம் போலவே எங்களது கம்ப்யூட்டர்களை வாங்கிக் கொண்டுள்ளனர். யாரும் குறைக்கவில்லை.
இருப்பினும் ஐடி மற்றும் ஐடெஸ் துறைகளிலிருந்து கோரிக்கைகள் குறைந்துள்ளன.
ஆனால் இதனால் எங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு வராது. காரணம், பிற துறைகளுடன் ஒப்பிடும்போது ஐடி மற்றும் ஐடெஸ் துறைகளில் எங்களது பங்கு பெரிய அளவில் இல்லை.
எங்களது வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் மீண்டும் கம்ப்யூட்டர் வாங்க விரும்பும்போது எங்களது தயாரிப்புகளையே நாடுகிறார்கள். இதனால் எங்களுக்கு ரிப்பீட் ஆர்டர்கள் குறையால் வந்து கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் லேப்டாப் விற்பனை சற்று குறைந்துள்ளது. விலை வேறுபாடே இதற்குக் காரணம். கடந்த ஒரு ஆண்டில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் விலை குறைந்திருப்பதால் லேப்டாப்களின் விற்பனையில் சற்று சரிவு காணப்படுகிறது.
நாட்டின் 2 மற்றும 3வது நிலை நகரங்களில் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் விற்பனை பெருமளவில் உயர்ந்துள்ளது.
இந்தியால் லேப்டாப்களின் ஆதிக்கம் 1000க்கு 30 என்ற அளவில்தான் உள்ளது. இதுவே சீனாவில் ஆயிரத்திற்கு 100 என்ற அளவிலும், அமெரிக்காவில் 700 என்ற அளவிலும் உள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகின்றன. இதில் 10.7 லட்சம் லேப்டாப்கள் ஆகும். மற்றவை டெஸ்க் டாப்கள் ஆகும்.
இன்னும் 3 ஆண்டுகளில் லேப்டாப்களின் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றார்.