For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டீஸ்கர் தேர்தலில் கடும் நக்ஸல் வன்முறை-55% வாக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் நக்ஸலைட்டுகள் பெரும் வன்முறைகளை நடத்தினர். ஓட்டுப் பெட்டிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாட்பர் மீது நக்ஸல்கள் சுட்டதில் விமானி பலியானார்.

சட்டீஸ்கர், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

சட்டீஸ்கரில் இரு கட்டமாக நடக்கும் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடந்தது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 39 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்ததால் தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந் நிலையில் தந்தேவாரா மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள பெடியா என்ற இடத்தில் வாக்குப் பதிவு மையத்தின் மீது நக்ஸலைட்டுகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் பல போலீசார் காயமடைந்தனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் மாலையில் வாக்குப் பதிவு முடிந்த பின் மின்னணு ஓட்டு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரில் கிளம்பினர். நக்ஸல்கள் தாக்குதலில் காயமடைந்த போலீசாரும் அதில் ஏற்றப்பட்டனர்.

அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதை நோக்கி, நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதில் விமானி முஸ்தபா அலியின் உடலில் குண்டுகள் பாய்ந்தன. அவர் மயங்கி சரியவே, துணை விமானி செளத்ரி, ஹெலிகாப்டரை பாதுகாப்பான இடத்தில் தரையிறக்கினார்.

சிறிது நேரத்தில் விமானி முஸ்தபா பலியானார்.

அதே போல தந்தே வாடா என்ற பகுதியில் தேர்தல் முடிந்ததும், போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன், அதிகாரிகள் புறப்பட்டனர். அப்போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். இதே மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற சில போலீசாரையும், நகஸ்ல்கள் கடத்திச் சென்று விட்டனர்.

மேலும் பஸ்தர் மாவட்டம் ரேகாகாரி, டோதார், ஆக்னர் என்ற இடங்களில் 21 வாக்கு சாவடிக்குள் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கிச் சென்றனர்.

கோண்டா சட்டசபை தொகுதியில் உள்ள சீத்லானர் என்ற இடத்தில் தேர்தல் பணியில் இருந்த 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினரை, நகஸ்லைட்டுகள் கடத்திச் சென்று விட்டனர்.

ஜக்தால்பீர் மாவட்டம் பேஜ்ஜி என்ற இடத்தில் நகஸல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 போலீசார் காயமடைந்தனர்.

புசாரத் என்ற இடத்தில் வாக்கு சாவடி அருகே 4 கிலோ எடையுள்ள கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீசார் கண்டுபிடித்து அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

55 சதவீத வாக்குப் பதிவு:

இவ்வளவு வன்முறைகளுக்கு மத்தியிலும் மாநிலம் முழுவதும் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. முதல்வர் ரமன் சி்ங்கையே மீண்டும் முதல்வர் பதவிக்கு பாஜக முன்னிருத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் அஜீ்த் ஜோகி தலைமையில் காங்கிரஸ் தேர்தல் சந்திக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X