புலிகளிடமிருந்து பூனேரியை கைப்பற்றிய ராணுவம்
வடக்கு இலங்கையில் உள்ள பூனேரி நகருக்குள் ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு இன்று காலை நுழைந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், வேறு விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
ராணுவத்தின் மிக முக்கியத் தளமாக விளங்கிய பூனேரி நகரை 1993ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர்.
அதிலிருந்து புலிகள் வசமே இருந்த இந்தப் பகுதியை ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி இப்போது மீட்டுள்ளது. பூனேரி நகரை பிடித்துள்ளதால் வட மேற்கு கடல் பகுதி ராணுவத்தின் வசம் வந்துள்ளது. இதன்மூலம் யாழ்பாணத்தை அடைய ராணுவத்துக்கு புதிய பாதை கிடைத்துள்ளது.
இதுவரை யாழ்பாணத்துக்கு படைகளையும் சப்ளைகளையும் வான்வெளி மார்க்கமாகவே ராணுவம் அனுப்பி வந்தது.
பூனேரியைத் தொடர்ந்து கிளிநொச்சியை நோக்கிய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. ஆனால், புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் முன்னேற முடியாமல் தவித்து வருகிறது ராணுவம்.
இப்போது வட கிழக்கே அக்கரையான்குளம், மாங்குளம், பலாவி, நல்லூர் ஆகிய இடங்களில் இரு தரப்பினரும் கடும் போரில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களை புலிகளிடம் இருந்து பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.