சிரஞ்சீவி கட்சியில் இணைந்த உபேந்திரா, சிவசங்கர்
ஹைதராபாத்: முன்னாள் மத்திய அமைச்சர்களான பி. உபேந்திரா மற்றும் ப.சிவசங்கர் ஆகியோர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இணைந்துள்ளனர்.
ஒரு காலத்தில் என்.டி.ஆருக்கு அடுத்து தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியத் தலைவராக திகழ்ந்தவர் உபேந்திரா. பின்னர் காங்கிரஸில் இணைந்தார். இவரது மருமகன் ராஜகோபால், காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜயவாடா எம்.பியாக இருக்கிறார்.
வி.பி. சிங் அமைச்சரவையில் செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார் உபேந்திரா.
1992ம் ஆண்டு உபேந்திராவும், ஐந்து தெலுங்கு தேசம் எம்.பிக்களும் கட்சியை விட்டு விலகினர்.
கம்மா நாயுடு பிரிவைச் சேர்ந்தவர் உபேந்திரா. இந்தப் பிரிவைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் சிரஞ்சீவி கட்சியி்ல் இணைவது இதுவே முதல் முறையாகும்.
சிரஞ்சீவி முன்னிலையில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் சேர்ந்துள்ள உபேந்திரா, கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
80 வயதாகும் சிவசங்கர், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். பின்னர் அமைதியாக இருந்து வந்த அவர், சமீபத்தில் மார்கரெட் ஆல்வா மீதான சர்ச்சையில், ஆல்வாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
சிரஞ்சீவி முன்னிலையில் நேற்று அவர் பிரஜா ராஜ்ஜியத்தில் இணைந்தார். அவரை கட்சியின் சட்டப் பிரிவு மற்றும் தேர்தல் அறிக்கை குழுவிகன் தலைவராக சிரஞ்சீவி நியமித்துள்ளார்.
இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக திகழ்ந்தவர் சிவசங்கர். இந்திரா அமைச்சரவையில் பல துறைகளை வகித்துள்ளார். ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் அமைச்சரவைகளிலும் இடம் பெற்றவர்.
கேரள மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.