அரசு விழாவில் அமைச்சர்கள் கீதா ஜீவன், ராதிகா செல்வி மோதல்!
தூத்துக்குடி: அரசு விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராதிகா செல்விக்கும், தமிழக அமைச்சர் கீதா ஜீவனுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. சண்டையைத் தொடர்ந்து இருவரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவன். தமிழக அமைச்சரவையில், சமூக நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.
சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி. பண்ணையார் சாவுக்குப் பின்னர் திமுகவில் இவர் சேர்ந்தார். எம்.பி. ஆனார். பின்னர் மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். தற்போது உள்துறை இணை அமைச்சராக இருக்கிறார்.
இரு பெண் அமைச்சர்களுக்கும் இடையே தூத்துக்குடி அரசியலில் பனிப்போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூர் என்ற இடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மத்திய அரசின் ஊரக சுகாதார இயக்கமும், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையும் இணைந்து இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் ராதிகா செல்வியும், அமைச்சர் கீதாஜீவனும் கலந்துகொண்டனர். இருவரும் முகாமைத் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு இருவரும் தாமதமாக வந்தனர்.
தாமதமாக வந்த நிலையில் மேடையில் வைத்து இருவருக்கும் மோதல் மூண்டது. இதனால் ஆத்திரமடைந்த கீதா ஜீவன், ராதிகா செல்வி பேசிக் கொண்டிருந்தபோது மேடையை விட்டு வெளியேறினார். இதைப் பார்த்து கோபமடைந்த ராதிகா செல்வி, தனது பேச்சை நிறுத்தி விட்டு அவரும் போய் விட்டார்.
நோயாளிகளுக்கு இரு அமைச்சர்களும் நலத் திட்ட உதவிகளை அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்ததால் நோயாளிகள் அதற்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இரு அமைசசர்களும் சண்டை போட்டுக் கொண்டு போய் விட்டதால் நோயாளிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுகவைச் சேர்ந்த இரு பெண் அமைச்சர்களும் மோதிக் கொண்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.