செனட் உறுப்பினர் பதவி-ராஜினாமா செய்த ஓபாமா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஓபாமா, தனது செனட் உறுப்பினர் பதவியை இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.
அமெரிக்க அதிபராக இருப்பவர்கள் நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராக இருக்க கூடாது. மேலும் எந்த அதிகாரப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது. அதற்கேற்ப தற்போது செனட் உறுப்பினராக உள்ள ஓபாமா, தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இல்லினாய்ஸ் மாகாணத்திலிருந்து செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓபாமா.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இல்லினாய்ஸ் மாகாணத்திலிருந்து செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்ற நேரத்தை நான் மறக்க மாட்டேன். இந்தப் பொறுப்பை சரியான முறையில் செய்ய உதவிய இந்த மாகாணத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
ஒரு பயணத்தை முடித்து விட்டு அடுத்த பயணத்தை நோக்கி நான் பயணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஓபாமாவின் இடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவார் என இல்லினாய்ஸ் மாகாண ஆளுநர் ராட் பிளகோஜெவிக் கூறியுள்ளார்.
செனட் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தனது அமைச்சரவைக் குழுவை உருவாக்கும் பணியில் ஓபாமா தீவிரமாக இறங்கியுள்ளார்.