ஹர்த்தாலுக்குப் பதில் மறியல் போராட்டம்: தா.பாண்டியன்
சில நாட்களுக்கு முன்பு தா.பாண்டியன் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 25ம் தேதி இலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹர்த்தால் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஹர்த்தால், மறியல் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.11.2008 அன்று நடந்த சர்வ கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்தக் கோரி, 25ம் தேதி தமிழகத்தில் முழு வேலைநிறுத்தம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவு குறித்து, இலங்கைப் போரினால் இலங்கை தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதில், ஒத்த கருத்துள்ள கட்சிகள், அமைப்புகள் இடையே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், முழு கடையடைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று சில கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
தமிழக மக்களின் குரல் உறுதியோடு ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என்பதால் போராட்ட முறையை மாற்றிட கலந்து ஆலோசிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள், அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க முழு அடைப்பு என்து தவிர்க்கப்படுகிறது.
போர் நீடிப்பதால், கோரிக்கை பற்றி மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்தக் கோரியும், 25ம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன்னர், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும், இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரே கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்று மறியலில் ஈடுபடுவோர் இந்தக் கோரிக்கையைத் தவிர வேறு எந்த முழக்கத்தையும் எழுப்பிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
கட்டுபாட்டுடனும், துக்கத்துடனும், இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றும் உயரிய பொறுப்புணர்வுடன் தமிழக மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க அறை கூவி அழைக்கிறோம் என்று கூறியுள்ளார்.