தேமுதிக சார்பில் சேலம்-ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை: தேமுதிக சார்பில் சேலத்திலும் ஈரோட்டில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இது குறித்து அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேமுதிகவின் 4வது ஆண்டு தொடக்க நாளன்று இளைஞர்கள், மகளிர் உட்பட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தேன். அதையொட்டி பல்வேறு இடங்களில் இருந்தும் வேலைவாய்ப்புகள் கோரி மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இது சம்பந்தமாக சிறு தொழில் நிறுவனங்களோடு பேசி வருகிறோம். முதற்கட்டமாக வரும் 22ம் தேதி சேலத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள விஜயராகவாச்சாரியார் மண்டபத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நடைபெறும்.
30ம் தேதி ஈரோட்டில், டெலிபோன் பவன் அருகில் உள்ள ஹோட்டல் யாளி ரெசிடென்சியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். அதில் பல தொழில் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுக்கு வேண்டிய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
சிபாரிசு இல்லை:
ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளக் கூடாது. எந்த இடத்தில் வேலை கிடைத்தாலும் அங்கு போய் சேருவதற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
தகுதியைப் பொறுத்தே வேலை கிடைக்கும் என்பதால் எந்த வகையான சிபாரிசுகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.