பிபிஓவில் பெரும் பெண்களின் பங்களிப்பு: நாஸ்காம்
பெங்களூரு: பிபிஓக்களில் பெண் ஊழியர்களின் பங்களிப்பு பெருகி வருவதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பிபிஓக்களில் மொத்தம் 2 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 2005-06-ம் ஆண்டு 24 சதவிகிதம் பெண் ஊழியர்கள் இருந்தனர். இப்போது இந்த நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 4 சதவிகித பெண்கள் அதிகரித்துள்ளதாக நாஸ்காம் தலைவர் சோம் மித்தல் தெரிவித்துள்ளார்.
2008-ஐடி துறையில் பெண்களின் தலைமை என்ற கருத்தரங்கில் இத்தகவலைத் தெரிவித்தார் மித்தல்.
மேலும் அவர் கூறுகையில், ஐடி துறையில் வேலை ஊக்குவிப்புக்கு முக்கிய சக்தியாகத் திகழ்வது பெண்கள்தான். தற்போதுள்ள பணிச் சூழலை இன்னும் மேம்படுத்தி மேலும் அதிக பெண் ஊழியர்களை ஈர்க்கும் திட்டமுள்ளது, என்றார்.
இந்த கருத்தரங்கில் பெண்களை அதிகம் ஊக்குவிக்கும் சிறந்த ஐடி நிறுவனங்களுக்கு விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
பெண் தலைமையை சிறப்பாக ஊக்குவிக்கும் நிறுவனமாக இன்போஸிஸ் தெரிவு செய்யப்பட்டது. நாஸ்காம் கார்ப்பரேட் அவார்ட் பார் எக்ஸெலன்ஸ் விருது இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
புதுமையான முறையில் ஆண்-பெண் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் நிறுவனமாக ஐபிஎம்-அஜுபா சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.