சட்டீஸ்கரில் இறுதிகட்ட வாக்குப் பதிவு முடிந்தது
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலில் கடைசி கட்டமாக 51 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடந்தது. மாலை 4 மணி வரை 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கும் இந்த மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 14ம் தேதி நடந்தது. 39 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப் பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின.
இந் நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது. இன்றைய தேர்தல் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தொகுதிகளில் நடந்தது. இதில் வாக்களிக்க 80.8 லட்சம் பேர் தகுதியுள்ளவர்கள் ஆவர்.
முதல் கட்டமாக மாநிலத்தின் தென் பகுதியில் நடந்த வாக்குப்பதிவின்போது கடும் நக்ஸல் வன்முறை நடந்தது. அதில் ராணுவத்தினர், போலீசார் உள்பட சிலர் பலியாயினர்.
இன்று வாக்குப் பதிவு நடக்கும் பகுதிகளில் நக்ஸல் தொல்லை இல்லை. இருப்பினும் 300 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பாஜக சார்பில் முதல்வர் ரமன் சிங் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 3 ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்குவதாக உறுதியளித்து தேர்தலை சந்திக்கிறார் சிங்.
அதே நேரத்தில் முன்னாள் முதல்வரான அஜீத் ஜோகி தலைமையில் அவரையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்.
மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் வரும் டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதற்கிடையே பிலாஸ்பூர் அருகே அஜீத் ஜோகியின் கார் மீது பாஜகவினர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.