குவாரி கும்பல் அட்டூழியம்-மூன்றரை வயது குழந்தை நரபலி?
மதுரையை அடுத்தள்ள புது தமரைப்பட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் ரவி. இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
எனது மூனறரை வயது மகள் கோபிகா எல்.கே.ஜி. படித்து வந்தாள். அவள் எனது வீட்டு முன்பு கடந்த செப்டம்பர் 6 ம் தேதி அன்று விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் திடீரென காணாமல் போனாள்.
அவளை பல இடங்களில் தேடியும் காணவில்லை. மறு நாள் நாட்டாமங்கலம் கால்வாயில் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாள்.
கோபிகா காணாமல் போன நாட்கள் முதல் எனது வீட்டு அருகில் வசிக்கும் ரவி என்பவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன.
தொடர் விசாரணை செய்தபோது, எனது குழந்தையை ரவி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றதும், குவாரி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக எனது மகள் கோபிகாவை சிலருடன் இணைந்து நரபலி கொடுத்ததும் தெரியவந்தது.
எனது மகள் இறந்த இடத்தில் 30 வது நாளில் சிலர் அந்த இடத்தில் பூஜைகள் நடத்தியுள்ளனர்.
ஆனால், இந்த சம்பவத்தில் கோபிகா மாருதி வேனில் அடிபட்டு இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்துள்ளனர். இதன்மூலம் உண்மையை மறைக்க போலீசார் முயல்கின்றனர்.
இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி கே.என். பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரம் தள்ளி வைத்தார்.
மதுரை அருகே கீழவளவு பகுதியில் இருந்த பல குன்றுகளையும் மலைகளையும் குவாரி கும்பல் சுரண்டி சுரண்டி தரைமட்டமாக்கிவிட்டனர்.
இப்போது மலைகள் இருந்த இடத்தில் பெரிய பள்ளம் தான் உள்ளது. தரைக்கு அடியிலும் இப்போது சுரங்கம் தோண்டி கிரானைட்டையும் மார்பி்ள் கற்களையும் எடுத்து வருகின்றனர்.
இதனால் எல்லா கட்சி கரை வேட்டிகளுக்கும் கொழுத்த லாபம்.