'ஸ்பெக்ட்ரம்'-அமைச்சர் ராஜாவுக்கு சிவிசி சரமாரி கேள்வி
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராஜா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் கை மாறியுள்ளதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி, இடதுசாரிகள், சமாஜ்வாடிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தற்போது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வசம் போயுள்ளதால் மத்திய அரசுக்கும், அமைச்சர் ராஜாவுக்கும் புதுச் சிக்கல் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள ஊழல் கண்காணிப்பு ஆணையம், 15 நாட்களுக்குள் இதற்குப் பதிலளிக்குமாறு அமைச்சர் ராஜாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் அலுவலகம் அனுப்பியுள்ள டிதத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தொலைத்தொடர்புத்துறை அனுப்பியுள்ள தகவல்கள் முழுமையாக இல்லை அல்லது தெளிவாக இல்லை.
சட்டவிரோதமாக, அதிக விலைக்கு ஈக்விட்டிகளை விற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு வேளை எடுக்கப்பட்டிருந்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும்.
ஒரு வேளை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்தால் அது சமூகத்தில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி விடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் நழுவல்:
இதற்கிடையே, இந்தப் பிரச்சினை குறித்து அமைச்சர் ராஜாதான் பதிலளிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் நழுவியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிருத்விராஜ் செளகான் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். அதுகுறித்து அமைச்சரிடம்தான் போய் கேட்க வேண்டும்.
பிரதமர் ஏதாவது கருத்து தெரிவிப்பதாக இருந்தால் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிடுவார் என்றார்.
முன்னதாக, பிரதமரும், நிதியமைச்சரும்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்தார்கள் என்று அமைச்சர் ராஜா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
ராஜா விளக்கம்:
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் ராஜா. அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் மற்றும் அது தொடர்பான உரிமங்களை குறைந்த விலைக்கு வழங்கி அரசுக்கு பெரும் செலவை ஏற்படுத்தியதாக கூறுவது அபாண்டமானது. இதுதொடர்பாக நிதியமைச்சகத்துடன், தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்துப் பிரச்சினைகளிலும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முன் கூட்டியே அனுமதி வாங்கிக் கொண்டு, ஒருவருக்கொருவர் ஆலோசித்த பின்னர்தான் முடிவு எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், நிதியமைச்சரின் பரிந்துரைகளை நான் ஏற்காததால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்றார்.
பாஜக தாக்கு:
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், இது மிகவும் சீரியஸான விஷயம். அரசுக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல சந்தேகத்திற்கிடமான சூழல்கள் நிலவுகின்றன.
உண்மைகளை வெளிக்கொணராமல் அமைச்சர் ராஜா தப்பி ஓட முயலுகிறார். பிரதமர், நிதியமைச்சர் ஒப்புதல் அளித்த பின்னர்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததாக தொடர்ந்து கூறி வருகிறார்.
எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது மிகப் பெரிய ஊழல். நடந்தது என்ன என்பது நாட்டுக்கும், மக்களுக்கும் தெரிய வேண்டும் என்றார்.
சமாஜ்வாடியும் கண்டனம்:
காங்கிரஸ் கட்சியின் புதிய அரசியல் கூட்டாளியான சமாஜ்வாடிக் கட்சியும், இந்த ஊழல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரியுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில், பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். அமைச்சரவையின் தவறுகளை திருத்த முன்வர வேண்டும். மக்களின் வரிப்பணம் பெருமளவில் சூறையாடப்பட்டுள்ளது. இதை அனுமதிக்க முடியாது என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோவும் ஊழலைக் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், யுனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்கள் ஷேர்களை விற்ற வகையில், நாட்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ள நிலையில், இதுகுறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளது.