சென்னை சென்ட்ரலில் வெடிகுண்டு புரளி-பீதி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்ததால் அங்கு பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில்வே 'ஹெல்ப்லைன்' தொலைபேசி எண்ணுக்கு இன்று அதிகாலை 6 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவன், 8 மணியிலிருந்து 9 மணிக்குள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டிவிட்டு துண்டித்துவிட்டான்.
இதனையடுத்து ரயில்வே ஐ.ஜி. உமா கணபதி சாஸ்திரி தலைமையில் ரயில் நிலையம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீசார், மாநகர காவல்துறையினர் என நூற்றுக்கணக்கான போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
நின்றிருந்த ரயில்கள், பயணிகள் தங்குமிடம், பயணிகளின் உடமைகள், பிளாட்பாரங்கள், ரயில் நிலைய கடைகள், பார்சல்கள் என அனைத்துமே சோதனையிடப்பட்டன.
பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
இந்த சோதனைகளால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது. பல பயணிகள் அச்சத்தில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
ஒரு ரூபாய் நாணயத்தால் இயங்கும் பொது தொலைபேசியில் இருந்து இந்த மிரட்டல் வந்துள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications