தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு
தனுஷ்கோடி: தனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கண்காணிப்பு பணி உள்ளது.
இந்த கண்காணிப்பையும் மீறி படகில் வரும் இலங்கை அகதிகளை நடுக்கடலில் இறக்கிவிடுவதும், மணல் திட்டுகளில் தவிக்க விடுவதும் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் தனுஷ்கோடி கடல் பகுதியில் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதாக புலனாய்வு துறை உயர் அதிகாரிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது.
இந்த நிலையில், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்த இந்திய கடற்படை செக்போஸ்ட் அகற்றப்பட்டது முதலே இலங்கை படகுகள் வந்து செல்வது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் தவித்த அகதிகள் படகுக்கு நள்ளிரவில் வந்த இலங்கை படகு பெட்ரோல் கொடுத்து உதவியதாக இலங்கையில் இருந்து தப்பி வந்த அகதிகள் சிலர் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒரு படகில் இன்ஜின் இல்லை. ஆனால் அந்த படகில் இருந்து இரவு நேரத்தில் பலர் படகிலிருந்து இறங்கி ராமேஸ்வரம் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த இலங்கை படகை இந்திய அதிகாரிகள் கைப்பற்றி அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.