விசாரணைக் கைதி ஓட்டம் - பெண் போலீசார் அதிர்ச்சி !
பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் அருகில் உள்ளது பேரூர். இங்கு வசிப்பவர் ரவிச்சந்திரன் (47).இவரது மகள் ரம்யா (13).
அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 -ம் வகுப்பு படித்து வந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தேவியாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (22). இவர் கட்டிட சென்ட்ரிங் வேலை செய்து வருபவர்.
சிவா வேலை நிமித்தமாக பேரூர் சென்ற போது அவருக்கும், ரம்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மலர்ந்துள்ளது.
இருவரும் அடிக்கடி ரகசிமாக சந்திப்பதும், காதல் மொழி பேசுவதுமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு ரம்யாவும், சிவாவும் திடீரென காணாமல் போனார்கள். ரம்யா காணாமல் போனதை அறிந்த அவரது பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதனால், தனது மகளை சிவா கடத்திச் சென்று விட்டதாக ரவிச்சந்திரன் பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் சிவாவும், ரம்யாவும் கரூரில் உள்ள ஒரு கோயிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு, பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தன்னை சிவா கொடுமைப்படுத்துவதாக ரம்யா, தந்தை ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் ரம்யாவின் தந்தை ரவிச்சந்திரன் இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் சிவாவை பிடித்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் காவல் நிலையத்தில், சாப்பிட்டு முடித்த பின்னர் கைகழுவி விட்டு வருவதாக கூறிய சிவா, தப்பியோடி விட்டார்.
இச்சம்பவம் அங்கிருந்த பெண் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தப்பியோடிய விசாரணைக் கைதி சிவாவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.