புரோஹித்-தயானந்த பாண்டேவுக்கு பெங்களூரில் நார்கோ அனாலிசிஸ் சோதனை
பெங்களூர் மடிவாளாவில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
நான்கு மணி நேரம் நடந்த இந்த சோதனையின்போது பல முக்கிய தகவல்களை இருவரும் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாலேகான் குண்டுவெடிப்பு பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி புரோஹித், சாமியார் தயானந்த பாண்டே, அபினவ் பாரத் என்ற அமைப்பின் தலைவர் சுதாகர் சதுர்வேதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புரோஹித்தை புனே போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சதுர்வேதிக்கு போலீஸ் காவல்:
இதற்கிடையே, இன்னொரு குற்றவாளியும், அபினவ் பாரத் என்ற தீவிரவாத இந்து அமைப்பைச் சேர்ந்தவருமான சுதாகர் சதுர்வேதிக்கு டிசம்பர் 3ம் தேதி வரை போலீஸ் காவலை அனுமதித்து மும்பை திட்டமிட்ட குற்ற செயல்கள் தடுப்பு (எம்.சி.ஓ.சி.ஏ) கோர்ட் உத்தரவிட்டது.
டிசம்பர் 3ம் தேதி வரை சதுர்வேதி போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.
மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு (ஏ.டி.எஸ்)போலீஸாரின் கோரிக்கையை ஏற்று சதுர்வேதி போலீஸ் காவலில் அனுப்பப்பட்டார். இவர் தவிர மேலும் 9 பேரை எம்.சி.ஓ.சி.ஏ சட்டத்தின் கீழ் கைது செய்ய மும்பை ஏடிஎஸ், நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது. ஏற்கனவே பிரக்யா சிங் தாக்கூர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம் அந்த 9 பேரையும் 24ம் தேதியன்று நேரில் ஆஜர்படுத்துமாறு ஏ.டி.எஸ்ஸுக்கு உத்தரவிட்டது.
போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ள சதுர்வேதி, அபினவ் பாரத் அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தவர். இவருக்கும், புரோஹித்துக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையின்போது தெரிய வந்தது.
நவம்பர் 4ம் தேதி தாதர் ரயில் நிலையத்தில் வைத்து மாதுங்கா போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து போலி ராணுவ அடையாள அட்டை, பிஸ்டல், 3 துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.