நாயருக்கு தெரியும் கருணாநிதிக்கு தெரியாது-ராம.கோபாலன்
சென்னை: நிலாவில் இந்திய தேசியக் கொடி தடம் பதித்த சாதனையை சாக்காக வைத்துக்கொண்டு முதல்வர் கருணாநிதி இந்துக்களின் நம்பிக்கையையும், புராணங்களையும் வழக்கம்போல் தாக்கியுள்ளார் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நிலாவில் இந்திய தேசியக் கொடி தடம் பதித்த சாதனையை சாக்காக வைத்துக்கொண்டு முதல்வர் கருணாநிதி இந்துக்களின் நம்பிக்கையையும், புராணங்களையும் வழக்கம்போல் தாக்கியுள்ளார்.
எல்லா மதங்களிலும் புராணக் கதைகள் உண்டு. அவற்றைப் பற்றி எல்லாம் கருணாநிதி அச்சம் காரணமாக வாய் திறந்து பேச மாட்டார்.
ஆனால் இந்துக்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பதால், வாய்க்கு வந்தபடி தூற்றுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்து விழிப்புணர்வு வளர்ச்சி அடைந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.
வான சாஸ்திரம் (அஸ்ட்ரானமி) வேறு; ஜோதிடம் (அஸ்டராலஜி) வேறு. ஜோதிடம், வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. உறவினர்களைக் கொண்டு ஜோதிடம் பார்க்கும் கருணாநிதிக்கு இது தெரியாத விஷயம் அல்ல. இருப்பினும் இவரை நம்பி ஏமாந்து போகக் கூடியவர்களை திசை திருப்ப இவர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரம் உலகம் அறிந்தது.
ராகு, கேது மீது நம்பிக்கை இல்லையெனில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதும், பதவி ஏற்பின் போதும் நல்ல நேரம் பார்ப்பது ஏன்?.
பவள மோதிரம், மஞ்சள் துண்டின் காரணம் தான் என்ன? திருச்சி திமுக மாநாட்டு கால்கோள் விழாவின் போதும், தற்போது புதிய தலைமைச் செயலகம், சட்டசபை கட்டுவதற்காகவும் நல்ல நேரம் பார்த்து, பிராமணரை வைத்து பூஜை நடத்தியது மட்டும் எந்த வகை பகுத்தறிவாம்?
தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் உள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று தமிழகத்தில் மழை பெய்வதற்கு 'வருணயாகம்' நடத்துங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?.
யாகம் முடியும் முன்பே தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டோவென்று கொட்டியதற்கு காரணமும் கருணாநிதிக்கு தெரியும் (!!!!).
இஸ்ரோவின் தலைவர் மாதவன் நாயர் பி.எஸ்.எல்.வி. விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு திருப்பதி பெருமாளை மனமுருகி பிரார்த்தார்.
என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் இறையருளும், ஆண்டவன் துணையும் அவசியம் என்று இஸ்ரோ தலைவருக்கு தெரியும்; ஆனால் நம் முதல்வருக்கு தெரியாது.
கருணாநிதி முதல்வர் என்கிற அதிகாரத்தில் இருந்து கொண்டு செய்யும் தரக்குறைவான விமர்சனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். கருணாநிதி இந்து மத விரோத கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.