மதுக் கடைகளை மூட அரசுக்கு ராமதாஸ் 'கெடு'
சென்னை தியாகராயர் நகரில் மது விலக்கை அமுல்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை நடந்தது. இதில் பல்வேறு தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசே மதுபான கடைகளை நடத்துவதுதால் குடிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. குடிக்காதவர்களையும் குடிப் பழக்கத்துக்கு ஆளாக்கும் நிலை உள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி, பெண்களும் குடிப்பழக்கத்துக்கு அடிமை யாகும் அவல நிலை உருவாகியுள்ளது.
எனவே பூரண மது விலக்கு கொள்கையை அரசு அமல்படுத்த வேண்டும். வரும் ஜனவரி மாதத்துக்குள் அனைத்து மதுக் கடைகளையும் மூடாவிட்டால் எல்லா அமைப்பினரும் இணைந்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்.
குடியில் இருந்து விடுபடுபவர்களுக்கும், கள்ளச் சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களுக்கும் சுய தொழில் செய்ய அரசு உதவ வேண்டும்.
பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் குடித்துவிட்டு வருபவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதுரை ஆதினம், பேராயர் எஸ்றா சற்குணம், திராவிட விழிப்புணர்வு கழக தலைவர் பி.டி.அரசக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.