சன் டிவி வழக்கு: வெளிவராத தீர்ப்பு லீக் - உயர்நீதிமன்றம் அதிர்ச்சி
சன் டிவி குழுமத்திற்கும், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் ராயல் கேபிள் விஷனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் சன் டிவி சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜெயபால் விசாரித்தார். வழக்கை விசாரித்து முடித்த அவர் செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தார். இதற்காக மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தீர்ப்புடன் கோர்ட்டுக்கு வந்தார்.
அப்போது இந்த வழக்கில் மேலும் விவாதம் நடத்த வேண்டும் என வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், அதை அனுமதித்த நீதிபதி ஜெயபால், அந்தத் தீர்ப்பை படிக்காமல் நிறுத்தி வைத்தார்.
ஆனால், அந்த வெளியிடப்படாத தீர்ப்பு, தற்போது தமிழ்நாடு சட்டக் குறிப்புகள் ஜர்னலில் வெளியாகியுள்ளது. இது உயர்நீதி்மன்ற வட்டாரத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
வெளியிடப்படாத தீர்ப்பு எப்படி வெளியானது என்பதை அறிய மூத்த நீதிபதி ஒருவரை விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் அடங்கிய ஏடுதான் இந்த ஜர்னல். நவம்பர் 10ம் தேதியிட்ட இதழில்தான் இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இதைப் பார்த்து வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீல்களும், வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபாலும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த வழக்கு வேறு ஒரு நீதிபதி முன்பு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்ற கிளர்க்குகள் செய்த தவறா அல்லது சதிச் செயலா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மூடி முத்திரையிடப்பட்ட உரையில் இருந்த தீர்ப்பு வெளியில் எடுக்கப்பட்டு, பிரசுரிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது இதில் சதிச் செயல் இருக்கலாம் என உயர்நீதிமன்ற வட்டாரம் கருதுகிறது.
சில நீதிபதிகள் தாங்கள் அளிக்கவுள்ள தீர்ப்பை, டிஜிட்டல் வாய்ஸ் ரெக்காடர்களில் பதிவு செய்து அதை ஸ்டெனோக்களிடம் கொடுப்பது வழக்கம். இதன் மூலம் தீர்ப்புகள் லீக் ஆக வாய்ப்புள்ளதாக வக்கீல்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முக்கியமான வழக்கு ஒன்றின் வெளியிடப்படாத தீர்ப்பு வெளியாகி, பிரசுரமும் ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.