நல்லூருக்குள் நுழைய முயன்ற ராணுவம் மீது புலிகள் பதிலடி-43 வீரர்கள் பலி
கிளிநொச்சி மீது ராணுவம் தெற்கு-வடக்கே இரு முனைத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் புலிகள் இந்த பதிலடியைத் தந்துள்ளனர்.
வடக்கிலிருந்து பூனகரி-பரந்தன் சாலையில் கிளிநொச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள நல்லூரில் ராணுவம் நேற்றிரவு நுழைய முயன்றபோது புலிகள் கடும் தாக்குதலை நடத்தினர். இதில் 43 வீரர்கள் பலியாயினர். மேலும் 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து ராணுவம் அந்த இடத்தை விட்டு உடனடியாகப் பின் வாங்கி பூனகரிக்கே திரும்பிச் சென்றுவிட்டது. பலியான வீரர்களில் 8 பேரின் உடல்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் ராணுவத்தினரிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.
இது குறித்து ராணுவத் தரப்பில், எங்கள் தரப்பில் உயி்ர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. 8 வீரர்களைக் காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தென் பகுதியில் இருந்து கிளிநொச்சிக்குள் நுழைய முடியாமல் கடந்த 4 வாரமாக ராணுவம் தவித்து வருகிறது. நின்ற இடத்திலேயே படைள் நின்று கொண்டுள்ளன. முன்னேற முடியாத அளவுக்கு புலிகளின் எதி்ர் தாக்குதல் உள்ளது.
இதையடுத்து நேற்றிரவு கன மழை பெய்த நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு திடீரென வடக்கிலிருந்து கிளிநொச்சிக்குள் நுழைய ராணுவம் முயன்றது. ஆனால், அதையும் புலிகள் முறியடித்துள்ளனர்.
இதற்கிடையே கன மழையால் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.