இலங்கை: நாளை அவசர அனைத்துக் கட்சிக் கூட்டம்
இன்று அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, நாளை காலை கோட்டையில் உள்ள எனது அறையில் இந்தக் கூட்டம் நடக்கும். இதில் பங்கேற்குமாறு சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுடன் பேசிவிட்டுத் தான் இந்தக் கூட்டத்தை கூட்டுகிறேன். இலங்கையில் தமிழர்களது பாதுகாக்கவும், அவர்களது துயரங்களுக்கு முடிவு கட்டவும் உடனே நடவடிக்கை எடு்க்குமாறு மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தவே இந்தக் கூட்டம் நடக்கிறது.
அங்கு தினந்தோறும் ஏராளமான தமிழர்கள் உயிர் பலி ஆவது குறித்தும், அவர்களது உடமைகள் அழிக்கப்படுவது குறித்தும் தினந்தோறும் கொடுமையான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த விஷயம் குறித்துப் பேசி அடு்த்த கட்டமாக மத்திய அரசிடம் என்ன கோரிக்கை வைக்கலாம் என்பதை முடிவு செய்யவே கூட்டத்தை கூட்டியுள்ளோம்.
சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தவிர, கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கலாம்.
இதன்மூலம் ராமதாஸ், வைகோ போன்றவர்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றார் கருணாநிதி.