புலிகள் தொடர்பு: வைகோவுக்கு பிரிட்டன் விசா மறுப்பு!
பிரிட்டன் தலைநகர் லண்டனில், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் 26-ந் தேதி கூட்டம் ஒன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக லண்டன் செல்ல அனுமதிக்கக்கோரி பொடா கோர்ட்டில் வைகோ மனு செய்திருந்தார்.
கோர்ட்டும் அவரது கோரிக்கையை ஏற்று லண்டன் செல்ல அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து வைகோ, சென்னையில் இருந்து லண்டன் செல்ல 24-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) விமான டிக்கெட்டும் எடுத்துவிட்டார்.
லண்டன் செல்ல விசா கேட்டு வைகோ, இங்கிலாந்து தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், இங்கிலாந்து தூதரகம் வைகோவுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, வைகோ தனது லண்டன் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
வைகோவுக்கு விசா வழங்க அனுமதி மறுத்தது குறித்து, சென்னையில் உள்ள இலங்கிலாந்து தூதரக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசி வருவதால், அவருக்கு விசா வழங்க இலங்கிலாந்து தூதரகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே புலிகள் அமைப்புக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.