உடல், மனரீதியாக சித்திரவதை: பிரக்யா புகார்
மும்பை: தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதாக மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் மீண்டும் புகார் கூறியுள்ளனர்.
பிரக்யா சிங், ஷாம்லால் சாஹு, அஜய் ரஹீர்கர், சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாய், சிவநாராயண் சிங், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் நேற்று மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்ட கோர்ட்டில் நீதிபதி ஷிண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அப்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மீது பரபரப்பு புகார்களை அடுக்கினார் பிரக்யா சிங் தாக்கூர்.
அவர் நீதிபதியிடம் கூறுகையில், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி போலீஸார் என்னைத் திட்டுகின்றனர். ஆபாசப் படங்களைக் காட்டி கூச வைக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
நள்ளிரவு 2 மணிக்கு என்னை எழுப்பி, நி்ர்வாண கோலத்தில் உன்னை அடிப்போம் என்று மிரட்டுகின்றனர் என்றார்.
புரோஹித் கூறுகையில், எனது மனைவி மற்றும் சகோதரி குறித்து ஆபாசமான வார்த்தைகளை என்னிடம் போலீஸார் பிரயோகித்தனர். எனது வீட்டில் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளை வைத்து எனது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போடுவோம் என மிரட்டுகின்றனர் என்றார்.
மற்ற குற்றவாளிகளும் இதேபோன்ற புகார்களை நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது வாக்குமூலங்களை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியான் பதிலளிக்கையில், புகார்கள் மிகப் பெரிதாக இருப்பதால், இதுகுறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
பின்னர் மீண்டும் பிரக்யாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் தரப்பில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.