ஸ்டான்லி மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்கு தனிப் பிரிவு
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு வசதியாக தனிப் பிரிவே தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் பெற்றோர் செய்த மிகப் பெரிய விஷயம், இன்று மிகப் பெரிய அலைகளை தமிழகம் முழுவதும் எழுப்பி பலருக்கு புது வாழ்வு கிடைக்க காரணமாக அமைந்துள்ளது.
ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்கியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மூளை மரணத்தைச் சந்தித்த பலரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு வருகின்றன.
கண் தானம், ரத்ததானம் போல இந்த உறுப்பு தானமும் அதிகளவில் நடக்க ஆரம்பித்துள்ளது. தினசரி இதுதொடர்பான உருக்கமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இதற்கு முத்தாய்ப்பாக, நேற்று விருத்தாச்சலத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்து இறந்த 18 வயது பெண்ணின் கண்களை அவரது பெற்றோர் தானமாக வழங்கிய சம்பவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.
இந்த நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடம் இருந்து உறுப்புகளை பெறுவதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது.
இந்த பிரிவில் ஆம்புலன்சுகள், கருத்துரையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பார்கள். மூளை செயல் இழந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தால் இங்கு தகவல் தெரிவிக்கலாம்.
உடனடியாக இந்த பிரிவினர் களம் இறங்கி உறுப்புகளை எடுத்து வந்து தேவைப்படுவோருக்கு பொருத்த நடவடிக்கை எடுப்பார்கள்.
தானம் செய்பவர்களை அழைத்துவர, ஆம்புலன்ஸ் வசதி இலவசமாக செய்யப்படும். உறுப்பு தானம் பற்றி இந்தப் பிரிவில் உள்ள கருத்துரையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்து வார்கள்.
யார் யாருக்கு உறுப்புகள் தேவை என்பது பற்றிய விவரங்கள் இங்கு சேகரித்து வைக்கப்படும். தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் உறுப்பு தேவைப்படுபவர்கள் பட்டியல் சேகரிக்கப்படும்.
இந்த தனிப் பிரிவுக்காக அரசு ரூ.1 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கி இருக்கிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை பெரும் பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை. இதேபோல அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனிப் பிரிவு தொடங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.