For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகை-வேதாரண்யம் இடையே இன்று கரை கடக்கும் 'நிஷா' புயல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே இன்று 'நிஷா' புயல் கரையைக் கடக்கவுள்ளது.

இதையடுத்து இந்தப் பகுதியில் கடலோரத்தில் வசிக்கும் சுமார் 3,500 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கை அறிக்கை:

வங்கக் கடலி்ல் தென் மேற்குப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்போது (காலை 8.30 மணி நிலவரப்படி) தமிழக கடலோரத்தில் இருந்து சிறிது தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது வலுவடைந்து புயல் சின்னமாக மாறிவிட்டது. இந்தப் புயல் தொடர்ந்து வட மேற்காக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து இதே வேகத்தில் நகர்ந்தால் இன்றே நாகப்பட்டிணம்-வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும்.

இந்தப் புயலுக்கு 'நிஷா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழை மேலும் தீவிரமாகும். புயல் கரையைக் கடக்கும்போது பயங்கர வேகத்தில் காற்று வீசுவதோடு மிக பலத்த மழையும் பெய்யும்.

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் 85 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும். உள் பகுதிகளில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

தமிழகம் தவிர கேரளம், கர்நாடகம், லட்சத் தீவுகளிலும் கன மழை பெய்யும்.

கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். நாகப்பட்டிணம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடல் அலைகள் 1 மீட்டர் உயரம் வரை எழும்பும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்த புயல் காற்றால் கூரை வீடுகள் பலத்த சேதமடையலாம், மரங்கள் முறிந்து விழலாம். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X