சரத் கட்சியில் ராதிகாவுக்கு முக்கிய பதவி
சென்னை: நெல்லையில் 30ம் தேதி நடைபெறும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுக் கூட்டத்தில், தனது மனைவி ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, வேலையின்மை, விவசாயிகள், தொழிலாளர்களின் தீராத பிரச்சினைகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி தவித்து நிற்கின்றனர்.
தொடர் அரிசி கடத்தல் போன்ற நிகழ்வுகளால் பொது வினியோகத்துறை மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் கிடைத்தபாடில்லை. தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் நிரந்தர பாதுகாப்பு இன்றி உயிரை கையில் பிடித்துக்கொண்டு தொழிலுக்கு செல்கிறார்கள்.
மக்களின் ஏழ்மை நிலையை பார்த்து, ஒரு கிலோ ஒரு ரூபாய் என ரேஷன் அரிசி வழங்கப்படும் தமிழ்நாட்டில், ரூ.60,000கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் என வெளிவருகிற செய்திகளை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து நிற்கின்றோம்.
கூப்பிடும் தூரத்தில் உள்ள இலங்கையில் நம் தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. அந்த கொடுமையை எதிர்த்து ஒன்றுபட்டு குரல் கொடுக்க நம் அரசியல் கட்சிகளுக்கு மனப்பக்குவம் இல்லை. இலங்கை தமிழர் பிரச்சினையையும் அரசியலில் அணி பிரிக்க பயன்படுத்துகிறார்கள்.
இத்தகைய சூழலில், நம் கொள்கைகளை, மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்தான் நெல்லையில் வருகிற 30ம் தேதி நடக்கிறது.
கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அன்பான வற்புறுத்தலுக்கு தலைவணங்கி ராதிகாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா?, அது என்ன பொறுப்பு என்பது நெல்லை கூட்டத்தில் அறிவிப்பட இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் நம் நிலை என்ன என்ற எதிர்பார்ப்போடு பொதுமக்கள் இருக்கிறார்கள். நம் உணர்வுகளை தமிழக மக்களோடு பகிர்ந்து கொள்ளும் நெல்லை பொதுக் கூட்டத்திற்கு அனைவரும் வாரீர். மாற்றத்தை நோக்கி புதிய பாதை வகுப்போம் புயலென வாரீர் என்று அழைத்துள்ளார் சரத்குமார்.