தீவிரவாதிகளிடம் யுஎஸ்-இஸ்ரேலிய பணய கைதிகள்-2 அமெரிக்க உளவுப் பிரிவினர் கொலை
இந்த ஹோட்டலில் 15 பேர் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகளாக சிக்கியிருந்தனர். இதில் 7 பேர் அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஆவர். இதில் சிலர் பிரேசிலைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் விவரம் தெரியவில்லை.
இந்தத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதையடுத்து இந்த ஹோட்டலில் இப்போது பிணயக் கைதிகள் யாரும் இல்லை. யாரும் இங்கிருந்து 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 2 பேர் அமெரிக்க உளவுப் பிரிவினர் எனத் தெரிகிறு.
மேலும் டிரைடண்ட் ஹோட்டலில் இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட 30 பிணயக் கைதிகளும் நரிமன் ஹவுஸ் ஹோட்டலில் அமெரிக்கர்கள் உள்ளிட்டவர்களும் பிணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மீட்க ராணுவமும் என்எஸ்ஜி படையினரும் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக தாஜ் ஹோட்டலின் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்ட இரு தீவிரவாதிகள் 7 வெளிநாட்டினர் உள்ளிட்ட 20 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி ஹோட்டலின் மாடிக்கு கொண்டு சென்றனர்.
அமெரிக்கர்கள்-பிரிட்டிஷாரை தேடி வந்தனர்:
அவர்களைப் பிடித்தபோது உங்களில் யார் யார் அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதில் 5 பேர் தப்பியோடிவிட்டனர். மற்ற 15 பேரையும் 18வது மாடியில் ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்துள்ளனர்.
அதே போல டிரைடன்ட் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளும் இங்கே அமெரிக்கர்கள், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் யார் என்று கேட்டபடியே தான் சுட்டுள்ளனர்.
பணயக் கைதிகளில் இஸ்ரேலியர்கள்:
இதற்கிடையே டிரைடண்ட் ஹோட்டலில் (ஓபராய் ஹோட்டல்) பல இஸ்ரேலியர்கள் உள்பட 30 பேர் பிணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஹோட்டலில் 10 முதல் 12 தீவிரவாதிகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தப் பணயக் கைதிகளைக் காப்பாற்ற கமாண்டோக்கள் அந்த ஹோட்டலை சூழ்ந்துள்ளனர். ஆனால், தங்களிடம் உள்ள பணயக் கைதிகளை பல பிரிவுகளாகப் பிரித்து ஹோட்டலின் பல்வேறு அறைகளிலும் அவர்கள் அடைத்து வைத்துள்ளதால் நிலைமை சிக்கலாகியுள்ளது.
அங்கு தீவிரவாதிகள் சுட்டு ஒரு ஊழியர் பலியாகியுள்ளார். அந்த ஹோட்டல் லாபியில் கிடந்த வெடிக்காத ஒரு கிரணைட் கைப்பற்றப்பட்டுள்ளது.