தாஜ் ஹோட்டலில் பிணயக் கைதிகள் இல்லை!
மும்பை: மும்பை தாஜ் ஹோட்டலில் இருந்த அனைவருமே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக மகாராஷ்டிர போலீஸ் டிஜிபி ராய் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க ராணுவமும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதே போல டிரைடண்ட் ஹோட்டலிலும் ராணுவமும் என்எஸ்ஜி படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
டிரைடண்ட் ஹோட்டலிலும் நரிமன் ஹவுஸ் ஹோட்டலிலும் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகள் சிக்கியுள்ள நிலையில் தாஜ் ஹோட்டலில் 3 தீவிரவாதிகளை கமாண்டோக்களும் போலீசாரும் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
மேலும் பிணயக் கைதிகளாக இருந்த அனைவருமே காப்பாற்றப்பட்டுவிட்டனர் என்றார் ராய்.
தாஜ் ஹோட்டலில் ஒவ்வாரு மாடியாக சென்று ஒவ்வொரு அறையாகச் சென்று ராணுவத்தினர் சோதனையிட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள அறைகளை உடைத்துத் தாக்கி வருகின்றனர்.
அங்கு இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. தீவிரவாதிகள் கிரனைடுகளை வீசு துப்பாக்கியால் சுட்டு வரும் நிலையில் ராணுவம் சிறிய ரக குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அங்கு மாலை வரை தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு என்.எஸ்.ஜி. கமாண்டோ வீரர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கமாண்டோக்கள் திருப்பி்ச் சுட்டதில் அங்கிருந்த தீவிரவாதிகள் 3 பேரும் கொல்லப்பட்டுவிட்டனர்.
முன்னதாக தீவிரவாதிகளின் கையெறி குண்டு வீச்சால் தாஜ் மஹால் ஹோட்டலின் 4வது மாடியில் தீப்பிடித்துக் கொண்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நேற்றிரவு பிடித்த தீ இன்று காலை தான் அணைக்கக்கப்பட்டது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த தாஜ் மஹால் ஹோட்டலின் ஒரு பகுதி தீயில் கருகி விட்டது.
தீவிரவாதிகள் கொல்லப்பட்ட பி்ன்னர் ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பயணிகள் உள்ளிட்டோர் ராட்சத கிரேன்கள் மற்றும் ஏணிகள் மூலம் மாடிகளில் இருந்து ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்டனர்.
படிகள் வழியே வந்தால் மறைந்திருக்கும் தீவிரவாதி யாராவது தாக்கலாம் என்ற அச்சத்தில் ஏணிகள் வழியே இறக்கப்பட்டனர்.
மேலும் ராணுவம் தவிர கடற்படை வீரர்கள், கமாண்டோப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஹோட்டலின் 4வது மாடியில் ஒரு அறையில் இன்று மாலை மீண்டும் தீப் பிடித்துக் கொண்டது.
இந்த ஹோட்டலில் இறந்து கிடந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த 6 பேருமே வெளிநாட்டினர் ஆவர்.