தீவிரவாதிகளை இறக்கி விட்ட 2 கப்பல்கள்-2 படகுகள் சிக்கின
மும்பை: மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை அழைத்து வந்து, ரப்பர் படகுகளில் குஜராத் அருகே இறக்கி விட்டுச்சென்ற வியட்நாம் கப்பல் உள்ளிட்ட இரு கப்பல்களையும் மற்றும் இரு ரப்பர் படகுகளையும் கடற்படை, கடலோரக் காவல்படையின் கப்பல்கள் சுற்றி வளைத்து பிடித்தன.
இதில் ஒரு கப்பல் குஜராத்தைச் சேர்ந்ததாகும். இதை தீவிரவாதிகள் கடந்த 13ம் தேதி கடத்திச் சென்று பெயரை மாற்றி பயன்படுத்தியுள்ளனர்.
இந்தத் தீவிரவாதிகள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து 2 கப்பல்களில் புறப்பட்டு இந்திய எல்லைக்குள் வந்துள்ளனர். குஜராத் கரைக்கு வெளியே கப்பல்களில் இருந்து ரப்பர் படகுகளில் இரு இறக்கி விடப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டுகள், ஏ.கே. ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், உணவு, சாட்டிலைட் தகவல் தொடர்பு சாதனங்களுடன் ரப்பர் படகுகள் மூலம் மும்பைக்குள் நுழைந்துள்ளனர். இவர்களை இறக்கிவிட்ட பின் இரு படகுகளும் மீண்டும் பாகிஸ்தான் கடல் எல்லையை நோக்கி விரைந்தன.
இதையடுத்துத கடற்படையின் 2 போர்க் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையைச் சேர்ந்த கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் இந்த கப்பல்கள், படகுகளைத் தேடி அரபிக் கடலில தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
அதே நேரத்தில் இவர்களை நடுக்கடலில் இறக்கிவிட்ட எம்.வி.ஆல்பா என்ற வியட்நாமை சேர்ந்த கப்பல் ஒன்றும் தெரியாதது மாதிரி மும்பை வரை வந்துவிட்டு திரும்பிச் சென்றது.
இன்னாரு கப்பலான அல் கபீர் மும்பை வரை வராமல் கராச்சிக்குத் திரும்பியது.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கப்பற் படையினருக்கு முதலில் எம்.வி.ஆல்பா மீது சந்தேகம் வரவே அதை மும்பையில் இருந்து 112 கி.மீ. தொலைவில் குஜராத் அருகே நடுக்கடலில் சுற்றி வளைத்தனர்.
அதில் மும்பையின் விரிவான மேப், உணவுப் பொருட்கள், சாட்டிலைட் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை இருந்தன. அதில் இருந்த சிலரும் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
அதேபோல் தீவிரவாதிகளை ஏற்றி வந்த அல் கபீர் கப்பலும் குஜராத் கடல் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையின் படகுகளால் மடக்கி பிடிக்கப்பட்டது.
மேலும் தீவிரவாதிகளை இறக்கிவிட்ட 2 ரப்பர் படகுகளும் பிடிபட்டுள்ளன.
இதில் அல் கபீர் கப்பலின் உண்மைப் பெயர் குபேர் ஆகும். குஜராத்தின் போர்பந்தரைதச் சேர்ந்த இந்தக் கப்பலை கடந்த 13ம் தேதி முதல் காணவில்லை. இதை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பெயரை மாற்றி பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.