தாஜில் இன்னும் தீவிரவாதிகள்
மும்பை: தாஜ் ஹோட்டலில் இன்னும் சில தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர்.
தாஜ் ஹோட்டலில் இருந்த தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக நேற்று ராணுவம் கூறியது. ஆனால், அங்கு இன்றும் தீவிரவாதிகள் உள்ளே இருந்தபடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அங்கு இரண்டுக்கும் மேற்படட தீவிரவாதிகள் இருக்கலாம் எனத் தெரிகிறது. ஒருவன் படுகாயமடைந்த நிலையில் சுட்டுக் கொண்டுள்ளது மட்டும் உறுதியாகியுள்ளது.
அவன் மாடி மாடியாக இடம் மாறி வருவதால் அவனை கொல்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. அவனிடம் ஒரு ஆணும் பெண்ணும் பணயக் கைதிகளாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவனைத் தவிர மற்ற தீவிரவாதிகளும் அங்கு பதுங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
அங்கு மாடி மாடியாக என்எஸ்ஜி படையினர் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இன்று காலை 11.48 மணியளவில் முதலில் பயங்கர கிரனைட் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது.
ஹோட்டலில் இருந்து பாய்ந்து வந்த ஒரு குண்டு தாக்கி கீழே நின்றிருந்த ஒருவர் காயமடைந்தார். அதே போல எஎப்பி செய்தி நிறுவன போட்டோகிராபரும் குண்டடிபட்டு காயமடைந்தார்.
கமாண்டோக்களால் சுற்றி வளைக்கப்பட்ட தீவிரவாதிகள் வெளியே நோக்கி சுட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தாஜ் ஹோட்டலின் பின் புற வாசலில் இருந்து உள்ள கிடக்கும் உடல்களை போலீசார் இன்று அப்புறப்படுத்தினர்.
அந்த ஹோட்டலின் சில அறைகளில் இன்று மாலை மீண்டும் திடீரென குண்டுச் சத்தம் கேட்டது. இதையடுத்து தீயும் பிடித்துக் கொண்டது. இது கமாண்டோக்கள் தாக்கியதில் ஏற்பட்ட தீயாகக் கருதப்படுகிறது.
அதே போல இரவு 7.37 மணிக்கும் இன்னொரு குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தமும் தொடர்ந்து வருகிறது.