தாஜ் ஆபரேசனில் என்எஸ்ஜி கமாண்டோ பலி!-'முதலில் இந்த டிவி கேமராக்களை சுடுங்கள்'!
மும்பை: தாஜ் ஹோட்டல் மற்றும் ஒபராய்-டிரைடண்ட் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பல தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) கமோண்டக்களும் படுகாயமடைந்துள்ளதாக தென் மண்டலத்துக்கான ராணுவ கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் என்.தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
அந்தக் காயங்கள் உயிரைக் கொல்லும் அளவுக்கு உள்ளனவா இல்லையா என்பதை இப்போது தெரிவிக்க முடியாது என்றார்.
ஆனால், தாஜ் ஹோட்டலில் நடந்த மோதலில் சந்தீப் உன்னிகிருஷ்ணன் என்ற கமாண்டோ வீரர் பலியாகிவிட்டது உறுதியாகியுள்ளது.
தம்புராஜ் கூறுகையில்,
ராணுவத்தின் இந்த என்எஸ்ஜி பிரிவின் கமாண்டோக்களின் பணி மகாத்தானது. தங்களது உயிரைப் பணயம் வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
தாஜ் ஹோட்டல்-டிரைடண்ட் ஹோட்டலில் நடந்த தாக்குதல்களி்ல் என்எஸ்ஜி கமாண்டோக்கள் தரப்பிலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த மேல் விவரம் தர முடியாது.
எத்தனை பேர் பலியானார்கள் என்று சொன்னால் அது தீவிராதிகளுக்கு உத்வேகம் தந்துவிடும்.
தாஜ் ஹோட்டலில் ஒரு பகுதி முழுமையாக மீட்கப்பட்டுவிட்டது. ஆனால், இன்னொரு பகுதியில் ஒரு தீவிரவாதி, ஒரு பெண்ணையும் ஆணையும் மேலும் சிலரையும் தனது கட்டுப்பாட்டில் பிணயக் கைதியாக வைத்துள்ளான். அங்கு இன்னொரு தீவிரவாதியும் இருக்கலாம்.
தாஜ் ஹோட்டலில் ஒரு மாடியில் மின்சாரத்தை தீவிரவாதி துண்டித்துவிட்டான். பல அறைகளும் மூடப்பட்டுள்ளன. அதையும் திறந்து பார்க்க வேண்டும். அதன் பின்னரே அதில் தீவிரவாதி இருக்கிறானா அல்லது மக்கள் இருக்கிறார்களா என்று தெரியும்.
மீடியா மற்றும் மக்களின் நெருக்கடி காரணமாக வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு என்எஸ்ஜி படை தள்ளப்பட்டுள்ளது. இதனால் நல்லது நடந்தாலும் கூட இந்த நெருக்கடி கமாண்டோக்களுக்கு சிக்கலையும் தந்துள்ளது.
இதனால் இந்த நெருக்கடிகளை எல்லாம் மனதில் கொள்ளாமல் நிதானமாகவே செயல்படுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அவசரப்பட்டு நமது வீரர்கள் உயிரை வீணாக இழந்துவிடக் கூடாது.
இந்த ஆபரேசனில் கடற்படை கமாண்டோக்கள், மும்பை போலீசாரின் உதவி மகத்தானது.
இன்னும் சில மணி நேரத்தில் இந்த ஆபரேசன் முடிந்துவிடும் என நம்புகிறேன் என்றார்.
தீவிரவாதிகள் உள்ள 3 கட்டடங்களையும் சூழ்ந்து நின்று என்எஸ்ஜியின் ஒவ்வொரு அசைவையும் டிவிக்கள் காட்டிக் கொண்டுள்ளனர்.
இந்த டிவி குழுவினரால் என்எஸ்ஜி படையினருக்கு ஏற்பட்டிருக்கும் தொல்லையைப் பார்த்தால் முதலில் அவர்கள் டிவி கேமராக்களை நோக்கி்த் தான் சுட வேண்டும் போலிருக்கிறது.