மும்பையிலேயே குடியேறி தாக்கிய தீவிரவாதிகள்
மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நாட்டுக்குள் வந்துள்ளனர். முதல் குழுவான 4 பேர் சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்து மும்பையில் வீட்டை வாடகைக்குப் பிடித்து குடியேறிவிட்டனர். அதில் இருவர் தாஜ் ஹோட்டலில் சமையல் பிரிவிலும், ஹோட்டலை சுத்தப்படுத்தும் ஹவுஸ் கீப்பிங் வேலைகளிலும் சேர்ந்துவிட்டனர்.
அவர்கள் ஹோட்டலின் அமைப்பை நன்றாக ஆய்வு செய்து வரைபடத்தையும் உருவாக்கியதாகவும் ஓபராய், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பிற இடங்களுக்கும் சென்று அவற்றின் வரைபடங்களையும் உருவாக்கியதாகவும் தெரிகிறது.
கிட்டத்தட்ட 2 மாதங்களில் தாக்குதலுக்கு முழு அளவில் தங்களைத் தயார் செய்து கொண்டனர். இவர்களது செலவுகளுக்காக மொரீசியஸ் வங்கியின் 9 சர்வதேச கிரெடிட் கார்டுகளும் தரப்பட்டுள்ள.
இதையடுத்து தாக்குதலுக்குத் தயார் என்று பாகிஸ்தானில் உள்ள தங்கள் தலைமைக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து மற்றொரு பிரிவினரான 6 தீவிரவாதிகள் புதன்கிழமை கராச்சியிலிருந்து போர்பந்தர் வழியாக கடல் வழியே ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் நேரடியாக மும்பைக்குள் வந்துள்ளனர்.
கராச்சியிலிருந்து கப்பலில் வந்த இந்த இரண்டாவது குழு போர்பந்தர் அருகே இறக்கிவிடப்பட்டனர். இவர்கள் குஜராத்தைச் சேர்ந்த ஒரு குபேர் என்ற சிறிய மீன்பிடி கப்பலில் 2 ரப்பர் போட்கள், ஏராளமான வெடி மருந்துகள், துப்பாக்கிகளுடன் மும்பை நோக்கி கிளம்பினர்.
மும்பை கரையை அடைந்த பின்னர் ரப்பர் போட்களுக்கு மாறினர். அந்தப் படகு திரும்பிச் சென்றுவிட்டது.
இந்தப் படகைத் தான் கடற்படையினர் பின்னர் கைப்பற்றினர். அப்போது இந்தப் படகின் பைலட் கைகள் பின் பக்கமாகக் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இவர் தீவிரவாதிகளுக்கு தெரிந்தே தான் உதவினார் என்றும், ஆனால் இவர் போலீசில் மாட்டினால் பல விவரங்கள் வெளியேறிவிடும் என்பதால் அவரை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே சந்தேககத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்ட பாகிஸ்தானிய கப்பலான ஆல்பா விடுவிக்கப்பட்டுவிட்டது. இந்தக் கப்பலுக்கு தாக்குதலில் தொடர்பில்லை என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே இந்திய கடற் படையும் கடலோரக் காவல் படையும் இன்று அரபிக் கடலில் 15 படகுகளை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பணியில் ஹெலிகாப்டர்களும் இந்தப் படையினருக்கு உதவி வருகின்றன.
இந் நிலையில் தீவிரவாதிகள் யாரும் தங்களில் ஹோட்டலில் வேலை பார்க்கவில்லை என்று தாஜ் ஹோட்டல் நிறுவனம் மறுத்துள்ளது.