மோதலில் இரு என்எஸ்ஜி வீரர்கள் பலி
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலி்ல் இரு என்எஸ்ஜி வீரர்கள் பலியாகியுள்ளனர். ஒருவர் மேஜர் கஜேந்திர சிங், இன்னொருவர் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன்.கஜேந்திர சிங் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார். உன்னிகிருஷ்ணன் கேரளத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் பெங்களூரில் வசித்து வருகிறது. சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன் இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கஜேந்திர சிங் ஹெலிகாப்டர் மூலம் நாரிமன் ஹவுசுக்குள் குதித்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியவர். அந்த சண்டையில் இவர் மீது குண்டுகள் பாய்ந்த நிலையிலும் தொடர்ந்து உள்ளே புகுந்து தாக்கினார். அப்போது மேலும் பல குண்டுகள் பாய்ந்து சரிந்து உயிர் நீத்தார்.
சந்தீப் உன்னிகிருஷ்ணன் தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் குண்டுக்கு இறையானார். ராணுவத்தின் பிகார் ரெஜிமெண்டில் பணியாற்றி என்எஸ்ஜி படைக்கு வந்தவர்.
இந்த இரு வீரர்களின் உடல்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. டெல்லியில் கஜேந்திராவின் இறுதிச் சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் நடந்தது.
உன்னிகிருஷ்ணனின் உடலுக்கு இன்று முப்படையினரும் கர்நாடக போலீசாரும் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.