தீவிரவாத தாக்குதல்: இயல்பு நிலைக்குத் திரும்பும் மும்பை
மும்பை: பயங்கர தீவிரவாதத் தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்திருந்த மும்பை மாநகர மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
மக்கள் வெளி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையிலும், தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை அடுத்த நொடியே ஊதித் தள்ளும் தீரமிக்க மனோபாவம் கொண்ட மும்பை மக்கள், வழக்கமான வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
இருப்பினும் எப்போதும் நிரம்பி வழியும் மின்சார ரயில்களில் சற்று கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. நிற்கக் கூட இடம் இல்லாத நிலையில் பயணிக்கும் பயணிகள் நேற்றும் இன்றும் உட்கார்ந்து நிதானமாக பயணித்ததைக் காண முடிந்தது.
வங்கிள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஊழியர்களின் எண்ணிக்கை முழு அளவில் இல்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன.
பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை வேட்டையாடி வரும் பகுதிகளில் மட்டும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் திறந்து வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தீவிரவாதத் தாக்குதல் நடந்த தெற்கு மும்பையில் மட்டும் அவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
பங்கு வர்த்தகம் வழக்கம் போல செயல்பட்டது.