தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
தூத்துக்குடி: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துறைமுகத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில்களில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆள் நடமாட்டம், சரக்குகள் போக்குவரத்து, வாகன நடமாட்டத்தை இவர்கள் கண்காணிப்பார்கள்.
துறைமுகப் பகுதியில் இரு விரைவுப் படைகள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு மோப்ப நாய்ப் படையும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பதை இது கண்டறியும்.
கடரோல ரோந்துப் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்கள், படகுகளிலும் தீவிர கண்காணிப்பும், சோதனையும் மேற்கொள்ளப்படும்.
ஒரு அதி வேக ரோந்துப் படகும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிக்க இரு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
துறைமுக ஊழியர்கள் அதிகபட்ச விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.