மாலேகான்: ஒரு வழக்கில் புரோஹித்துக்கு ஜாமீன்
நாசிக்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித்துக்கு போலி ஆயுத உரிம வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள புரோஹித் மீது நவம்பர் 15ம் தேதி போலி ஆயுத உரிம வழக்கு பதிவானது. புனேவைச் சேர்ந்த ஷிரீஷ் டேட் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாசிக் போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.
டேட் கொடுத்த புகாரில், எனக்கு ஆயுத உரிமம் வழங்க போலியான ஆவணங்களைத் தயாரித்து போலி உரிமத்தை வழங்கினார் புரோஹித் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாசிக் நீதிமன்றத்தில் புரோஹித் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி வி.வி. ஜோஷி, ரூ. 15,000 தனி நபர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இருப்பினும் பிற வழக்குகளில் புரோஹித்துக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் விடுதலையாக முடியாது.
இதற்கிடையே வழக்கு விசாரணைக்காக நாசிக் கொண்டு வரப்பட்ட புரோஹித், பின்னர் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள், புரோஹித்தை மீண்டும் மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.