தீவிரவாதிகள் பயன்படுத்திய சேட்டிலைட் போன்..ஜிபிஎஸ்..கூகுள் எர்த்
மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மும்பையின் வரைபடத்தை உருவாக்கவும், டார்கெட்களைத் தேர்வு செய்யவும் கூகுள் எர்த் தளத்தை முழு அளவில் பயன்படுத்தியுள்ளனர்.மேலும் பாகிஸ்தானில் இருந்து கிளம்பி மும்பையை அடையும் வரை சேடடிலைட் போன் மூலம் தங்களது தலைவனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டே வந்துள்ளனர்.
இதற்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட சாட்டிலைட் போனை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த போனை அவர்கள் கடத்திய குபேர் படகிலேயே தவறுதலாக விட்டுவிட்டு ரப்பர் படகுகளுக்கு மாறி மும்பைக்குள் வந்துவிட்டனர்.
குபேர் படகை இந்திய கடலோரக் காவல் படை குஜராத் அருகே கடல் பகுதியில் சுற்றி வளைத்தபோது, அதில் ஒருவன் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலையாகிக் கிடந்தான். அவனருகே சாட்டிலைட் போனும் கிடந்தது.
தீவிரவாதிகள் தான் இவனைக் கொன்றுவிட்டு மும்பைக்குள் நுழைந்துள்ளனர்.
இந்த சாட்டிலைட் போனில் இருந்து செய்யப்பட்ட கால்கள், அந்த போனுக்கு வந்த கால்கள் ஆகியவை குறித்த லாக் ரிப்போர்ட்(Log reports) அமெரிக்க உதவியோடு இந்திய உளவுப் பிரிவினுருக்குக் கிடைத்துள்ளது.
இந்த சாட்டிலைட் போன் எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் பயணித்தது என்பது இந்த லாக் ரிப்போர்ட்டில் உள்ளது.
அதன்படி கடந்த 13ம் தேதி கராச்சி துறைமுகத்திலிருந்து இந்த போன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. பின்னர் குஜராத் கடலோரம் வழியாக மும்பை கடல் பகுதிக்கு வந்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது பாகிஸ்தானின் முஷாபரபாத்தில் உள்ள லஷ்கர் ஏ தொய்பாவின் கமாண்டர் யூசுப் முசம்மிலுக்கு இந்த போனிலிருந்து பல அழைப்புகள் சென்றுள்ளன. அவனிடமிருந்தும் ஏராளமான கால்கள் வந்துள்ளன.
மேலும் ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்துக்கும் அழைப்புகள் சென்றுள்ளன.
மேலும் பிடிபட்ட தீவிரவாதியிடம் உள்ள வரைபடங்களில் மும்பையின் கூகுள் எர்த் படங்களும் உள்ளன.
படகில் பலரை கொன்ற தீவிரவாதிகள்:
முன்னதாக குபேர் படகை தீவிரவாதிகள் கடத்தியபோது அதிலிருந்த 4 ஊழியர்களை கொன்று கடலில் வீசி விட்டனர். பின்னர் படகின் ஓட்டுநரான அமர்சிங் சோலன்கி மற்றும் இன்னொரு ஊழியரை மட்டும் உயிருடன் விட்டு வைத்து அவர்களை மும்பை நோக்கி செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
மும்பையை நெருங்கியபோது இன்னொரு ஊழியரையும் கொன்று கடலில் வீசியுள்ளனர். பிறகு மும்பையை மிகவும் நெருங்கியபோது, சோலன்கியையும் கொன்று விட்டனர். கழுத்து அறுபட்டுக் கிடந்தது சோலன்கி தான்.
இதற்கிடையே சோலன்கிக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. தெரிந்தே தான் அவர் தீவிரவாதிகளுக்கு உதவினார். கடைசியில் அவரையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர் என்கின்றனர்.