இலங்கை ராணுவத்திடம் கொக்காவில் பிடிபட்டது!
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத் தீவில் உள்ள மிக முக்கிய நகரான கொக்காவில் தங்களது படைகளிடம் பிடிபட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.
இது குறி்த்து ராணுவம் வெளியிட்டுள்ள அறி்க்கையில், 57வது படைப்பிடிவினர் கொக்காவில்லைப் பிடித்துவிட்டனர். இதையடுத்து வன்னிப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தத் தாக்குதல் மூலம் யாழ்பாணம்-கண்டி சாலையின் கிழக்கே வெகு தூரம் வரை ராணுவம் முன்னேறிவிட்டது.
கொக்காவில்லின் வட பகுதியிலிருந்து தெற்கு நோக்கி தாக்குதல் நடத்தியவாரே முன்னேறிய ராணுவம் மாங்குளம் வரை உள்ள புலிகளின் அனைத்து முக்கிய தளங்களையும் சிதறடித்துவிட்டது.
18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்தப் பகுதியை 1990ம் ஆண்டு ஜூலையில் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர் என்று ராணுவம் கூறுகிறது.
இதற்கிடையே விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளிநொச்சியில் அக்கரையன்குளத்துக்கு வட கிழக்கே உள்ள புலிகளின் முக்கிய தளங்கள் மீது விமானப் படை குண்டு வீச்சு நடத்தியது என்று கூறியுள்ளது.
மேலும் ராணுவம் நடத்திய தாக்குதலில் மட்டக்களப்பின் தென் பகுதிக்கான தலைவர் கலை மதுரன் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.