2 தொழிற்சாலை திட்டங்களை கைவிடும் டாடா ஸ்டீல்
ஜார்க்கண்டிலும் சட்டீஸ்கரிலும் இந்த நிறுவனம் இரு புதிய இரும்பு உற்பத்தி ஆலைகளை அமைக்க இருந்தது. அந்தத் திட்டங்கள் இப்போதைக்கு கைவிடப்பட்டுவிட்டதாக டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குனர் முத்துராமன் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஜாம்ஷெட்பூரில் நடந்து வரும் தொழிற்சாலை விரிவாக்கப் பணி தொடர்ந்து நடக்கும். ஐரோப்பாவில் உள்ள எங்களது கோரஸ் இரும்பு ஆலைக்குத் தேவையான கச்சா இரும்பை தென் ஆப்பிரிக்கா மற்றும் கனடாவில் இருந்து பெற இருக்கிறோம் என்றார்.
டென்மார்க் நிறுவனமான கோரஸை சில மாதங்களுக்கு முன்பு தான் டாடா நிறுவனம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கோரஸ் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க டாடா நடவடிக்கைகள் எடுத்துள்ளது. போனஸ்கள் ரத்து செய்யப்படுவதோடு, தாற்காலிக ஊழியர்களை குறைக்கவுள்ளது.
அதே நேரத்தில் ஊழியர்களை நீக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டத்தைத ஈடுகட்ட டென்மார்க் அரசிடம் 7.6 பில்லியன் டாலரையும் நிதியுதவியாக கோரியுள்ளது டாடா-கோரஸ்.
டாடா கார் ஆலை 3 நாட்கள் மூடல்:
அதே போல கார்கள் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் தனது புனே கார் தொழிற்சாலையை அடுத்த வாரத்தில் 3 நாட்கள் மூடவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கார் உற்பத்தியை டாடா நிறுவனம் குறைக்கிறது.